ஆசிரியர் குறிப்பு
S ராதாகிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட கார்முகிலோன், 1960ம் வருடம், ஏப்ரல் மாதம் 6ம் நாள், பழைய தஞ்சை ஜில்லா, மாயவரம் தாலுகா, மங்கைநல்லூர் கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் பெயர் V சாமிநாத ஐயர்,
S பிச்சம்மாள்
பெற்றோர் சிறப்பு;
தகப்பனார் சாமிநாத ஐயர் 1930 முதல் 1970 வரை பள்ளி ஆசிரியர். தேச விடுதலைக்காகப் பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர். பகலில் சர்க்கார் உத்யோகம். இரவில், கைப் பொருள் செலவிட்டு, சேரிகளுக்கெல்லாம் சென்று 'இரவுப் பள்ளிகள்' நடத்தியவர். ஹரிஜன மக்களின் மேம்பாட்டிற்காக அயராது பாடுபட்டவர். அவரது சேவையைப் பாராட்டி, காங்கிரஸ் கட்சி இலவசமாக மண்ணெண்ணை வழங்கியது.
தேசப் பிதா மஹாத்மா காந்தி, பண்டித நேருஜி, சர்தார் வல்லபாய் படேல், மூதறிஞர் ராஜாஜி, மவுலானா அபுல் கலாம் ஆசாத், கர்மவீரர் காமராஜர், கக்கன்ஜி, சி சுப்ரமண்யம் போன்ற பெரியோர்களால் பாராட்டப் பட்டவர். அவரது அனைத்து முயற்சிகளுக்கும் ஊக்கமும் ஆதரவும் தந்தவர் அவர்தம் மனைவி பிச்சம்மாள் ஆவார்.
கார்முகிலோன் உடன் பிறந்தோர் சகோதரர் மூவர் மற்றும் சகோதரியர் இருவர்
மனைவியின் பெற்றோர்;
பெரியகுளம் தென்கரை அக்ரஹாரம் ராமஸ்வாமி ஐயர் - கோமதி அம்மாள்.
இருவருமே பள்ளி ஆசிரியர்களாகப் பணிபுரிந்தவர்கள்.
கார்முகிலோன், பள்ளி கல்லுாரி நாட்களிலே பேச்சு, கட்டுரை, நாடகம் மற்றும் கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளைப் பெற்றவர். தமிழக முன்னாள் முதல்வர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி, தமிழக முன்னாள் கவர்னர்கள் மோஹன்லால் சுகாதியா, ப்ரபுதாஸ் பட்வாரி ஆகியோர்களிடம் இருந்து பரிசுகள் வாங்கியவர்.
ஈ.வெ.ரா மணியம்மையார், மன்னை நாராயணசாமி, பண்ருட்டி ராமச்சந்திரன், என்.வி. நடராசன், க. ராஜாராம், நாஞ்சில் மனோகரன், டாக்டர் காளிமுத்து, சிலம்புச் செல்வர் ம.பொ.சி, அருட்செல்வர் டாக்டர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம், முன்னாள் கல்வியமைச்சர் அரங்கநாயகம், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மால்கம் ஆதிசேஷையா, செட்டிநாட்டரசர் ராஜா சர் முத்தையா செட்டியார், தினத்தந்தி நிறுவனர் மற்றும் முன்னாள் அமைச்சர் சி. பா. ஆதித்தனார், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம் எம் இஸ்மாயில் மற்றும் குமரி அனந்தன் ஆகியவர்களிடம் இருந்தும் பற்பல பரிசுகள் வாங்கியவர்.
'அண்ணாவும் நாவன்மையும்' என்னும் தலைப்பில் இவர் ஆற்றிய உரையைக் கேட்டு, டாக்டர் கலைஞர் அவர்கள், 'செல்வன் ராதாகிருஷ்ணனின் பேச்சு தங்கத் தாம்பாளத்திலே வைரக்கற்களை வைத்துப் பதித்தது போல் இருந்தது' என்று பாராட்டினார்.
அகில இந்திய வானொலியில் 'இளைய பாரதம்' நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டுள்ளார்.
இவர், சென்னையில் உள்ள உலகப் புகழ் பெற்ற வாகன உற்பத்தி நிறுவனத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
கடந்த 07.01.2017 அன்று, சென்னை இக்சா மையத்தில், ஒரே மேடையில்
24நூல்களை வெளியிட்டு சாதனை படைத்தவர்.
இவருடைய 24 நூல்களுக்கும் வழங்கிய அணிந்துரையை, 'கார்முகிலோன் 24' எனுந் தலைப்பில், மின்னல் கலைக்கூடத்தின் அதிபர் கவிஞர் வசீகரன் அவர்கள் தனி நூலாக வெளியிட்டுள்ளார்.
இது வரை கார்முகிலோன் எழுதியுள்ள நூல்களின் எண்ணிக்கை ஐம்பதிற்கும் அதிகம் ஆகும்..
இவரது மனைவி டாக்டர் ஜெயலட்சுமி, சென்னையில் உள்ள தனியார் பொறியியற் கல்லுரியில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்.
இவர்களது ஒரே புதல்வி ராஜ்யஸ்ரீ எம் டெக் படிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர். கோவையில், அம்ரிதா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். மாப்பிள்ளை ஹரிஹரசுதன் மென்பொருள் பொறியாளர். இவர்களுக்கு ஒரே குழந்தை மஹாராணி உத்தராஜி.
மாப்பிள்ளையின் தந்தையார் திரு V ரமணி. இவர் ஓமன் நாட்டில் தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாயார் சித்ரா அம்மையார்.
கார்முகிலோன் பணி ஓய்விற்குப்பிறகு, தஞ்சை பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில், முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டு, நிர்வாகத்துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இதுவரை, நாற்பதிற்கும் அதிகமான சர்வதேச இதழ்கள், இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.
கார்முகிலோன் கல்வித் தகுதி.
MA, MBA, M.Phil, P.hD, PGDBM, PGDBA. PGDHRM, PGDIM